snap

Monday, June 05, 2006

போதை மருந்து வழக்கில் ராகுல் மகாஜன் கைதாகிறார்?

மறைந்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் பிரமோத்மகாஜனின் மகன் ராகுல் மகாஜன் போதை மருந்து விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். தற்போது ஆஸ் பத்திரியில் இருக்கும் அவர் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை.

அவருக்கு நினைவு திரும்பி விட்டாலும் இன்னும் முழுமையாக பேசும் அளவுக்கு இல்லை என்று அவர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

ராகுல்மகாஜன் மயங்கி விழுந்ததற்கு போதை மருந்துதான் காரணம் என்று இப்போது உறுதியாக தெரிய வந்து உள்ளது. அவருடைய சிறுநீர் தனியார் ஆய்வுக் கூடம் ஒன்றில் பரிசோதிக்கப்பட்டது. சிறுநீரில் போதை மருந்து இருப்பது தெரிய வந்தது.

போதை மருத்து பயன் படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே இந்த பிரிவின்படி அவர் மீது வழக்கு தொடர போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே போடப்பட்ட எப்.ஐ.ஆரில் போதை மருந்து தொடர்பான 3 பிரிவுகளை சேர்த்துள்ளனர். ஆனாலும் ராகுல் மகாஜன் பெயரை அதில் நேரடியாக சேர்க்கப் படவில்லை. அவருடன் விருந்து சாப்பிட்ட 4 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கைதான ஷகில் ராகுல் மகாஜனுக்கு போதை மருந்து கொடுத்ததை ஒத்துக் கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் ராகுல் மகாஜனிடம் விசாரணை நடத்த உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தும் அளவுக்கு உடல்நிலை இல்லை என்று டாக்டர்கள் கூறி விட்டதால் இன்னும் விசாரணை நடத்த வில்லை.

இன்று அல்லது நாளை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அவர் வாக்கு மூலத்தை பெற்ற பின் அவரை கைது செய்ய திட்டமிட்டு உள்ளனர். வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவர் மீது போதை மருந்து வழக்கில் ஏதாவது ஒரு பிரிவு சேர்க்கப்படும்.

போதை மருந்து வழக்கில் பிரிவு 21, பிரிவு 27, பிரிவு 29 ஆகிய 3 பிரிவுகள் உள்ளன. இதில் பிரிவு 21 போதை மருந்து வியாபாரம் தொடர்பானது. இந்த பிரி வில் கைதானால் ஜாமீன் கிடையாது. 10 ஆண்டு முதல் 20 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்கும்.

பிரிவு 27 போதை மருந்தை பயன்படுத்துவது தொடர்பானது. இது சாதாரண பிரிவுதான் இதன்படி கைதானால் ஒரு வருடம் வரை ஜெயிலோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.

29-வது பிரிவு போதை மருந்து சதி தொடர்பானது விசாரணையின் அடிப்படையில் இதற்கு தண்டனை வழங்கப்படும்.

ராகுல்மகாஜன் மீது குறைந்த பட்ச தண்டனை பிரிவான 21-வது பிரிவை சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கு போதை மருந்து கொடுத்த ஷகீல் மீது அதிக பட்ச பிரிவு சேர்க்கப்படும். டெல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்த அவரை 8 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதித்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-நன்றி: மாலைமலர்

No comments: